×

ஊட்டி ரோஜா பூங்காவில் முதல் பாத்தியில் பூத்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி,பிப்.21: ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் முதல் பாத்தியில் ரோஜாக்கள் பூத்துள்ளதால் இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இருப்பினும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மார்ச் மாதம் துவங்கினாலே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இச்சமயங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்படும்.

 அனைத்து பூங்காக்களிலும் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பூங்காக்களில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி போன்றவைகளும் நடத்தப்படுகிறது.
மே மாதம் நடக்கவுள்ள ரோஜா கண்காட்சிக்காக தற்போது ஊட்டி ரோஜா பூங்காவில் அனைத்து செடிகளும் கவாத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், செடிகள் அனைத்தும் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. அதேசமயம், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க முன்னதாக கவாத்து செய்யப்பட்ட முதல் பாத்தியில் தற்போது மலர்கள் பூத்து குலுங்கியுள்ளன. பல வகையான மற்றும் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் இந்த ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

மலர்களே இல்லாத தாவரவியல் பூங்காவை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு ரோஜா பூங்காவில் உள்ள மலர்கள் விருந்தாக அமைந்துள்ளது. அதேசமயம் ரோஜா பூங்காவில் மலர்கள் உள்ளது பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. எனவே, ரோஜா பூங்காவில் மலர்கள் பூத்துள்ளது அறியும் வகையில் தாவரவியல் பூங்கா உட்பட இதர பூங்காக்களில் அறிவிப்பு பலகை வைத்தால், ஊட்்டி வரும் சுற்றுலா பயணிகள் பலரும் இந்த ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்ல வாய்ப்புள்ளது.

Tags : Ooty Rose Garden ,
× RELATED தொடர் மழையால் ஊட்டி ரோஜா பூங்காவில்...