×

தொடர் விபத்து எதிரொலி கல்லட்டி மலைப்பாதையில் பயணிக்க வெளி மாநில வாகனங்களுக்கு மீண்டும் தடை

ஊட்டி,பிப்.21: கல்லட்டி மலைப்பாதையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி வெளி மாநில வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியிலிருந்து முதுமலை மற்றும் மைசூர் செல்வதற்கு தலைகுந்தா, கல்லட்டி மற்றும் மசினகுடி வழியாக செல்ல வழி உள்ளது. செங்குத்தான மலையில் இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் குறுகலான மற்றும் அதிக வளைவுகளை கொண்ட இச்சாலையில் வாகனங்களை மிகவும் பாதுகாப்பாக இயக்க வேண்டும். எனினும், இப்பாதையில் சிலர் வேகமாக வாகனங்களை இயக்குவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. கடந்த இரு ஆண்டுக்கு முன் ஏற்பட்ட கோர விபத்து ஒன்றில் 5 பேர் உயிரிழந்தனர். அதன்பின், இவ்வழியில் வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்கள் பயணிக்க காவல்துறை தடை விதித்தது.

உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், இச்சாலையில் கடந்த இரு ஆண்டுகளாக எவ்வித விபத்தும் ஏற்படவில்லை. இந்நிலையில், மசினகுடி பகுதி மக்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இவ்வழியில் வாகனங்களை இயக்க அனுமதி வழங்கிடும்மாறு காவல்துறையிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, கடந்த வாரம் முதல் இவ்வழித்தடத்தில் வெளி மாநில வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதேசமயம், இவ்வழியில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க காவல்துறை சார்பில் தலைகுந்தா, கல்லட்டி போன்ற பகுதிகளில் அறிவுரை வழங்கப்படுகிறது. எனினும், இதனை சிலர் வேகமாக வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்கிக் கொள்கி–்ன்றனர்.

கல்லட்டி பாதையில் வெளி மாநில வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் கூட ஆகாத நிலையில்,இதுவரை 5 விபத்துகள் ஏற்பட்டுவிட்டன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேலும், இவ்வழித்தடத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கிய பெரும்பாலான வாகனங்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவை. மேலும், பொக்காபுரம் கோயில் திருவிழாவை முன்னிட்டு தற்போது இவ்வழியில் ஏராளமான உள்ளூர் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால், பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மீண்டும் இவ்வழித்தடத்தில் வெளி மாநில வாகனங்கள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இச்சாலையில் வெளி மாநில வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், 10 நாட்களில் 5 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதியும், உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு கருதியும் தற்காலிகமாக இச்சாலையில் வெளியூர் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையான கூடலூர் வழித்தடத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் வாகனங்கள் சென்று வர எவ்வித தடையும் இல்லை, என்றனர்.

Tags : Kallatti hill ,
× RELATED விபத்துக்களை தவிர்க்க கல்லட்டி...