தர்மபுரி, பிப்.21:தர்மபுரி மாவட்டத்தில் 2500 ஏக்கரில் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, நல்லம்பள்ளி, மொரப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட ஒன்றியங்களில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நான்கு மாத பயிரான கொண்டை கடலை ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ மகசூல் கிடைக்கிறது. தற்போது பூ பூத்து காய் பிடிக்கும் நேரத்தில் மழை பெய்ததால், பூக்கள் உதிர்ந்தது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. போதிய விளைச்சல் இல்லாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பனிப்பொழிவில் அதிக விளைச்சல் தரக்கூடியது கொண்டைக்கடலை. ஒரு செடியில் பத்தில் இருந்து இருபது வரை மட்டுமே கடலை காய்க்கிறது. இவைகள் வறட்சியை தாங்கி வளரும் செடி. மழையிலும், பனிபொழிவிலும் கொண்டைக்கடலை பயிர் வளர்த்து விடுகிறது. தற்போது பூத்து காய்பிடிக்கும் நேரத்தில் மழை தொடர்ந்து பெய்ததால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.