உத்தமபாளையம், பிப். 21: முல்லைப்பெரியாறு அணை ஆய்வுக்குழுவினர் சென்ற கார், உத்தமபாளையம் அருகே விபத்தில் சிக்கியதால், வேறு காரில் மதுரை சென்றனர். முல்லைப் பெரியாறு அணை உறுதித்தன்மையை ஆய்வு 3 பேர் கொண்ட மத்திய தலைமை கண்காணிப்புக்குழு, மற்றும் 5 பேர் கொண்ட துணைக்குழு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள், முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, 13 மதகுகளை இயக்கி, ஆய்வுகள் நடத்தி, அதன் முடிவுகளை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து வருகின்றனர். அணையில் செய்யப்பட வேண்டிய பணிகளைப் பற்றியும் பரிந்துரை செய்வர். இந்நிலையில், மத்திய தலைமை கண்காணிப்புக் குழுத்தலைவரும், மத்திய நீர்வள ஆதார தலைமைப் பொறியாளருமான குல்சன்ராஜ் தலைமையில் தமிழக அரசு சார்பில், காவிரியாறு தொழில் நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் மாநில நீர்ப்பாசனத்துறை செயலாளர் பிரணாப் ஜோதிநாத் ஆகியோர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இதையடுத்து குல்சன்ராஜ் தலைமையில் வந்த கார் தேக்கடி சென்ற பின்பு, மீண்டும் மதுரைக்கு புறப்பட்டு வந்தது. உத்தமபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட் அருகே, எதிரே கம்பம் வந்த மற்றொரு கார், ஆய்வுக்குழுவினர் கார் மீது மோதியது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக வேறு காரை வரவழைத்து மதுரைக்கு குழுவினரை அனுப்பி வைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. உத்தமபாளையம் காவல்நிலையத்தில் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.