திருச்சி, பிப். 19: திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்கள் 20 பேர் தேர்ந்தெடுத்து அவர்கள் இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வில் பங்கேற்க ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
இதற்கு விருப்பம் உள்ளோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதலை மீன்வளத்துறை இணையதளமான www.fisheries.tn.gov.inல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை மண்டல மீன்துறை துணை, இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் திருச்சி, நம்பர் 4, காயிதே மில்லத் தெரு, காஜாநகர், மன்னார்புரம், திருச்சி-620 020 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ இன்றைக்குள் (19ம் தேதி) ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.