×

திருவாரூர் கோயில் ஆழித்தேரோட்டத்தையொட்டி தேர் கண்ணாடி கூண்டு பிரிக்கும் பணி மும்முரம்

திருவாரூர், பிப்.19: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவினையொட்டி ஆழித்தேர் கண்ணாடி கூண்டு பிரிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனோ காரணமாக கடந்தாண்டு நடைபெற வேண்டிய தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனோவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்ட விழாவினை நடத்துவதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்ற நிலையில் விழா துவக்கத்திற்காக மஹா துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சியானது அடுத்த மாதம் 2ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து மாத இறுதியில் தேரோட்ட விழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழித்தேர் கட்டுமான பணிக்கு குறைந்தபட்சம் 45 நாட்கள் தேவை என்ற நிலையில் தற்போது நேற்றுமுன்தினம் முதல் அதன் கண்ணாடி கூண்டுகளை பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Thiruvarur ,flooding ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...