×

இடம், நிதி ஒதுக்கீடு செய்தும் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதில் தாமதம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

திருவையாறு,பிப்.19: திருவையாறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு இடம் ஒதுக்கீடு செய்தும் ரூ. 80 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்தும் கட்டிம் கட்டும் பணி துவங்கவில்லை. விரைவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. திருவையாறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம், பொதுப்பணிதுறைக்கு சொந்தமான பழைய பயணியர் மாளிகை கட்டிடத்தில் ஒரு திண்ணையில் கடந்த 26.12.1997ம் ஆண்டு செயல்பட தொடங்கியது. சுமார் 6 ஆண்டுகள் அதே இடத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் அங்கு புதிய பயணியர் மாளிகை கட்டிடம் கட்ட வேண்டி இருந்ததால் அங்கிருந்து தீயணைப்பு நிலையம் காலி செய்யப்பட்டு போலீஸ்நிலையம் அருகில் காவேரி நகரில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வாடகைக்கு இயங்கி வருகிறது.

திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் கட்டிடம் கட்டப்படவில்லை. திருவையாறு தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரி உட்பட 17 வீரர்கள் பணிசெய்து வருகின்றனர். புதிய கட்டிடம் கட்டினால் நிலைய அதிகாரி அறை, கண்ட்ரோல் அறை, ரிக்கார்டு அறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு ஓய்வறை, கழிப்பிட வசதியுடன் கூடிய குளியல் அறை, 4 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டி, தீயணைப்பு வாகனத்திற்கு நிழற்குடை அமையும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

மேலும் தீயணைப்பு நிலைய அதிகாரி மற்றும் வீரர்கள் வெளியூரில் இருந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் எதிர்காலம் கருதி குடியிருப்பு வசதி செய்துகொடுத்தால் அவர்கள் உள்ளுரில் தங்குவார்கள், அவர்களது குழந்தைகள் திருவையாறு நகரில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர வசதியாக இருக்கும். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம், தீயணைப்பு விரர்களுக்கு புதிய குடியிருப்பு வசதி செய்துகொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : government ,delay ,building ,funding fire station ,location ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...