நாகை, பிப்.19: நாகையில் வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் இரண்டாம் நாளாக நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேதையன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட கலெக்டருக்கு அதிகாரம் வழங்க வேண்டும். மாவட்டங்களில் அதிகளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்திரவாதம் செய்து உடனே தீர்வு காண வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாம் நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை: இதேபோல் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகாகளை சேர்ந்த 100 வருவாய்துறை ஊழியர்கள் நேற்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.