தர்மபுரி, பிப்.19: தர்மபுரியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று 2வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் அசோக்குமார், சிவன், இணை செயலாளர் ராஜிவ்காந்தி, மாநில செயலாளர் வெங்கடேஸ்வரன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை உறுதி செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக வரன்முறை செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இணை செயலாளர் எழில்மொழி, மாவட்ட துணை தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.