திருப்பூர், பிப்.19: திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). கட்டிட தொழிலாளி. இவருக்கும் திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முகமது ரியாஸ் (36) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜேம்ஸ் தனது நண்பர்களுடன் முகமது ரியாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது முகமது ரியாஸ் இல்லாததால் ஆத்திரத்தில் அவரின் தந்தை முகமது முஸ்தபாவை அரிவாளால் கழுத்து, கை பகுதியில் வெட்டியுள்ளனர். இதனை தடுத்த முஸ்தபாவின் மனைவி சகிதாபானுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேம்ஸ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.