×

ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க அலைகடலென திரண்டு வாரீர்

காங்கயம், பிப்.19: தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநதான், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டப்பேர்வை தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் திருப்பூர் கிழக்கு, தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பொதுமக்களை சந்தித்து பொதுப்பிரச்னைகள் குறித்து எழுத்துப்பூர்வமான மனுக்களை நேரில் பெறுகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். அவ்வாறு வந்த புகார்களை தீர்க்க தனியாக ஒருதுறை ஏற்படுத்தப்பட்டு அந்தந்தத் துறை வாயிலாக பொதுமக்கள் தந்துள்ள புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீங்கள் என்னைக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே, மனுவுக்குப் பதிவு எண் தருகிறோம். “உங்களுக்காகவே நான், உங்களில் நான்”, நீங்கள் உங்கள் பிரச்சனைகளை என் முதுகில் ஏற்றி வைத்துள்ளீர்கள். உங்கள் பிரச்னைகளை நான் நிச்சயம் தீர்த்து வைப்பேன் என தி.மு.க. தலைவர் உறுதியளித்துள்ளார்.  

இந்த நல்ல வாய்ப்பினை காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) மதியம் 1 மணியளவில் தாராபுரம் பேருந்து நிலையம் எதிரில் தேன்மலர் பள்ளி அருகில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” தேர்தல் பரப்புரை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.  திருப்பூர் கிழக்கு, தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள், ஒவ்வொரு வீட்டிற்கும் அழைப்பிதழை கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுப்பிரச்னைகள் குறித்து எழுத்து பூர்வமான மனுக்களை கொடுக்க தக்க வழிவகை செய்திடுவதோடு, பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க.வினரும், பொதுமக்களும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அலைகடலென திரண்டு வாருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : show ,Stalin ,
× RELATED சென்னையில் மோடியின் ரோடு ஷோ நடைபெறும்...