தூத்துக்குடி, பிப். 19: தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட கீதாஜீவன் எம்.எல்.ஏ., தலைமைக்கழகத்தில் விருப்ப மனு அளித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று பொதுச்செயலாளர் அறிவிப்பு வௌியிட்டார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தலைமைக்கழகத்தில் நேற்று விருப்ப மனு அளித்தார். இதேபோல் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமியும் விருப்ப மனு அளித்தார். மேலும், தூத்துக்குடி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டி கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஜெகன்பெரியசாமி ஆகியோர் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோரிடம் மனு அளித்தனர்.