தூத்துக்குடி, பிப். 19: ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். ஒவ்வொரு மாதமும் உரிய சம்பளம் வழங்கிட உத்தரவாதம் வழங்கவேண்டும். பணியில் இருந்து நீக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும், நீண்டகாலமாக வழங்கப்படாத மருத்துவ பில்களை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட தொலைபேசி நிலைய வளாகத்தில் நடந்த இப்போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார். செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் பால்ராஜ் பட்டுகுமார், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கிளைச்செயலாளர் ஹரிராமச்சந்திரன் நன்றி கூறினார்.