×

பண்ருட்டி அருகே வாலிபர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கடலூர், பிப். 19: பண்ருட்டி அருகே வாலிபரை என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  கடலூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன் (30). இவரை கடலூர் சுப்பராயலு நகரில் 16ம் தேதி இரவில் நடந்த வீராங்கன் என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றவரை பண்ருட்டி அருகே 17ம் தேதி போலீசார் சுட்டுக்கொன்றனர். அவரது உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் அவரது தாயார் லட்சுமி (44), கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். மனுவில், தனது மகன் ஓவியராகவும், இசைக்குழுவில் டிரம்ப் வாசிப்பவராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், ரவுடி வீரா என்பவரின் கொலை வழக்குக்காக எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர்.

அவர் மீது எந்த குற்ற வழக்கும் இல்லாத நிலையில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று போலி என்கவுன்டர் செய்துள்ளனர். எனவே, இச்செயலில் ஈடுப்பட்ட உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கிருஷ்ணனின் உடலை தங்களது தரப்பு மருத்துவர் முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்வதோடு, அதனை முழுமையாக ஒளிப்பதிவு செய்ய வேண்டும். கிருஷ்ணனின் வருமானத்தை நம்பியே குடும்பம் நடத்தி வந்ததால் அவரது மனைவிக்கு அரசு வேலையும், குடும்பத்துக்கு ரூ.1 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : CBCID ,Panruti ,youth encounter ,
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...