இளையான்குடி, பிப்.19: வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் காரணமாக இளையான்குடியில் தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணி வரன்முறை அதிகாரத்தை, மாவட்ட ஆட்சியாளர்களுக்கு வழங்க வேண்டும். மாவட்ட அளவில் அதிகளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்ஜி, பதிவுறு எழுத்தர், ஈப்பு ஓட்டுநர் ஆகிய பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக நிரப்ப வேண்டும். ஜாக்டோ, ஜியோ போராட்ட காலத்தை பணி காலமாக வரன்முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறையினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளையான்குடி தாலுகா ஆபீசில் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அலுவலகம் முழுவதும் வெறிச்சோடி கிடந்தது. அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது.