×

15 பவுன் நகை திருட்டு: கணவர் மீது மனைவி புகார்

பரமக்குடி, பிப்.19: பரமக்குடி அருகே வீட்டில் இருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் நெல்மடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. கோவிந்தராஜ் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தராஜ் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். இதனை தமிழ் செல்வி கண்டித்துள்ளார். இதனால் கோவிந்தராஜ் தகராறு செய்துள்ளார். இதில் கோபமடைந்த தமிழ்ச்செல்வி தனது நகையை கொடுத்துவிட்டால் வீட்டை விட்டு வெளியே செல்வதாக கூறியுள்ளார். மேலும் தகராறு ஏற்பட்டதால் தமிழ்ச்செல்வி வீட்டின் அருகே உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று இரவில் தங்கிவிட்டு காலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது  பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன்  நகைகளை காணவில்லை. இதுகுறித்து கணவரிடம் கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார். இதுகுறித்து தமிழ்ச்செல்வி பார்த்திபனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் கோவிந்தராஜ் மற்றும் அவரது நண்பர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் பாதி நகையை வைத்துவிட்டு மற்றதை  கொள்ளையடிக்க வாய்ப்பில்லை, ஆகையால் வீட்டில் இருப்பவர்களே நகையை திருடி இருக்க வாய்ப்புள்ளதாக கணவர் கோவிந்தராஜிடம்  விசாரணை செய்து வருகின்றனர்.


Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு