×

குடியாத்தம் அருகே (வேலூர்) ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம் கிராம மக்கள் பீதி

குடியாத்தம், பிப். 18: குடியாத்தம் அருகே ஒற்றையானை தொடர் அட்டகாசம் செய்து வருவதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். தமிழகம்- ஆந்திரா- கர்நாடகா எல்லையை ஒட்டிய பகுதியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியையெட்டி உள்ள ஆந்திர வனப்பகுதியில் யானைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள யானைகள் அடிக்கடி சரணாலயத்தை விட்டு வெளியேறி குடியாத்தம் வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களாக ஒற்றை யானை குடியாத்தம் அடுத்த கதிர்குளம், கொட்டமிட்டப்பள்ளி, மோர்தானா ஆகிய கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானையை வனத்துறையினர், வனப்பகுதிக்குள் விரட்டியடித்து வருகின்றனர். இருப்பினும் ஒற்றை யானை மீண்டும் மீண்டும் ஊருக்குள் நுழைய முயற்சி செய்து வருகிறது.

அதேபோல், நேற்று அதிகாலை ஒற்றை யானை குடியாத்தம் அடுத்த சைனகொண்டா கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் இந்த யானை மீண்டும் ஊருக்குள் வந்து விடுமோ என கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, காட்டு யானைகள் கிராம பகுதிக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gudiyatham ,Vellore ,
× RELATED வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்கு...