நெல்லை, பிப். 18: தமிழகத்தில் வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர். நெல்லையில் மாநில செயலாளர் சுப்பு தலைமையில் 225 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் நெல்லை மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. நெல்லை கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றதால் வருவாய் துறையில் பணிகள் அனைத்தும் நேற்று ஒரு நாள் முழுவதும் முடங்கியது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் நடந்து வரும் நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தேர்தல் பிரிவு உட்பட முக்கிய பிரிவுகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. வருவாய் துறையினரின் போராட்டம் தொடர்ந்தால் தேர்தல் பணிகள் கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது.