×

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது தேவாலயங்களில் சாம்பல் புதன் ஆராதனை

நெல்லை, பிப். 18: கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியதையொட்டி தேவாலயங்களில் சாம்பல் புதன் ஆராதனை நடந்தது. குருத்தோலைகளை எரித்து அதன் சாம்பலை கிறிஸ்தவர்கள் நெற்றியில் பூசினர். பெத்லகேமில் இயேசு கிறிஸ்து, இறைப்பணியை தொடங்கும் முன்பு உபவாசம் இருந்தார். அவரது சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள், கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பர். இந்த 40 நாட்களும் தவக்காலம் அல்லது லெந்துநாட்கள் அல்லது கஸ்திநாட்கள் என அழைக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மாமிசம் உள்ளிட்ட உணவு வகைகள் சாப்பிடுவதை தவிர்த்து தங்களை வருத்திக் கொள்வர். ஒருவேளை உணவு மட்டுமே உண்பது, தான தர்மம் செய்வது, ஏழைகளுக்கு உணவு அளிப்பது போன்ற சடங்குகளை கடைபிடிப்பர். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை.

இந்த ஆண்டிற்கான திருநீற்று புதன் என்றழைக்கப்படும் தவக்காலம் நேற்று தொடங்கியதை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள், காலையில் நடந்தன. இதையொட்டி கடந்தாண்டு குருத்தோலை ஞாயிற்று கிழமைகளில் பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்து அதன் சாம்பலை இறைமக்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசிக் கொண்டு ஆராதனைகளில் பங்கேற்றனர். கத்தோலிக்க ஆலயங்களில் குருத்தோலைகளை எரித்து அதன் சாம்பலை அனைவரது நெற்றியிலும் பங்குத்தந்தையர்கள் பூசினர். பாளை சவேரியார் பேராலயத்தில் நேற்று காலை 6 மணிக்கு சாம்பல் புதனையொட்டி ஆயர் அந்தோனிசாமி தவக்கால ஆராதனையை நடத்தினார். இதில் பங்குதந்தை ராஜேஷ், உதவி பங்குதந்தையர் மிக்கேல் பிரகாசம் பங்கேற்றனர்.

தொடர்ந்து வரும் நாட்களில் ஆலயங்களில் தவக்கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன்படி தவக்கால நடைபயணம், தவக்கால தியானம், தவக்கால சிலுவை பயணம், தவக்கால மறைமாவட்ட திருப்பயணம், குருத்தோலை ஞாயிறு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. குறிப்பாக வெள்ளிதோறும் ஆலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் தவக்கால பிரார்த்தனைகள் நடைபெறும். தவக்காலத்தின் பிரதான நிகழ்வுகளில் ஒன்றான பெரிய வியாழன், வரும் ஏப்.1ம்தேதி கடைபிடிக்கப்பட்டு பாதம் கழுவும் சடங்கு நடக்கிறது. ஏப்.2ம்தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனிதவெள்ளி அனுசரிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இயேசு உயிர்த்தெழும் நாளாக ஏப்.4ம்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் கடைபிடித்த வரும் கட்டுப்பாடுகள் ஈஸ்டர் பண்டிகையோடு நிறைவு பெறும்.

Tags : Lent ,Christians ,churches ,Ash Wednesday ,
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி