×

விழுப்புரத்தில் பரபரப்பு கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை

விழுப்புரம், பிப். 18:  விழுப்புரத்தில் கள்ளக்காதல் தகராறில் ஓட்டல் தொழிலாளி கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இது தொடர்பாக வடநாட்டு வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  விழுப்புரம் நகராட்சி அலுவலகம் எதிரே ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (45), கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (39). இவர்களுக்கு கவுசல்யா என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர்.

கவுசல்யா (21)வும், விழுப்புரத்தில் வசித்து வரும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனு (31) என்பவரும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்  திருமணம் செய்துகொண்டனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சேகர் மதுபோதைக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
இதனால் சித்ரா தனது மகன் சக்திவேலுவுடன் வசித்து வருகிறார். அவர்களுடன் கவுசல்யா, அவரது கணவர் சோனு ஆகியோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சித்ரா காந்தி சிலை அருகே உள்ள ஓட்டலில் வேலைக்கு சென்றபோது அதே ஓட்டலில் வேலை பார்க்கும் பாலமுருகன் (26) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 7 நாட்களுக்கு முன்பு இருவரும் உளுந்தூர்பேட்டையில் உள்ள சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு அப்பகுதியில் வீடு எடுத்து தங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் சித்ரா மட்டும் விழுப்புரம் திரும்பினார். அவரை பேருந்து நிலையத்தில் இருந்து அவரது மருமகன் சோனு பைக்கில் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அவர் தனது மாமியாரிடம் நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தவறு, ஊரில் பலவிதமாக பேசுகிறார்கள் என்று கூறினாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் வீடு திரும்பினார்.

சிறிதுநேரத்தில் பாலமுருகன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சோனுவுக்கும், பாலமுருகனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.  உடனே வெளியே சென்ற சோனு மது குடித்துவிட்டு, கடைக்கு சென்று கத்தி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் சோனு, பாலமுருகனை கத்தியால் சரமாரி குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை சித்ரா மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலமுருகன் இறந்தார். இது தொடர்பாக விழுப்புரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து சோனுவை கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : death ,Viluppuram ,love affair ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...