×

குடிநீர் குழாயில் இருந்து வெளியே வந்த பாம்பு

தாராபுரம், ஜன. 18: தாராபுரம் அருகே மரவபாளையம் கிராமத்தில் பொது குடிநீர் குழாயிலிருந்து வெளியே வந்த பாம்பை கண்ட பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தாராபுரம் அருகே உள்ளது சூரிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மரவ பாளையம் கிராமம். இங்கு விவசாயக் கூலி வேலைகளை தொழிலாக செய்து வரும் 80க்கு அதிகமான ஏழை குடும்பத்தினர் வசிகின்றனர். இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பொது வினியோக குழாயில் பெண்கள் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தண்ணீருடன் சாரைப்பாம்பு ஒன்றும் குடிநீர் குழாயில் இருந்து வெளியே வருவதை கண்ட பெண்கள் குடங்களை கீழே போட்டு விட்டு அலறியடித்து ஓடினர்.இதேபோல் கடந்த மூன்று நாட்களுக்கு முன் இக்கிராமத்தில் உள்ள குடிநீர் குழாய்களில் குடிநீர் பிடிகத்தபோது தவளைகளின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெளியே வந்தது. மேலும் குடிநீரும் கடும் துர்நாற்றத்துடன் வந்ததால் அதை யாரும் பயன்படுத்தாமல் தண்ணீரை கீழே கொட்டி விட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர். இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டியை பாதுகாப்பாகவும் அடிக்கடி சுத்தப்படுத்தவும் வேண்டும், என்றனர்.

Tags : drinking fountain ,
× RELATED திருப்பூரில் நாளை கேன்சர் விழிப்புணர்வு