×

தலைக்குந்தா அருகே தோடர் இன மக்களின் பாரம்பரிய ‘மொற்பர்த்’ பண்டிகை கொண்டாட்டம்

ஊட்டி, ஜன. 18: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் பனியர் உட்பட 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு பழங்குடி மக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரியம், உடை, இருப்பிடம், பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர்.
தோடர் இனமக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் ‘மொற்பர்த்’ எனப்படும் தங்களின் பாரம்பரிய புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள தோடர் மக்கள் அனைவரும் தோடர் மக்களின் தலைமை மந்தாக உள்ள முத்தநாடு மந்தில் ஒன்று கூடி மொற்பர்த் பண்டிகையை கொண்டாடுவார்கள். பண்டிகையின் போது தங்களின் பாரம்பரிய கோவிலில் வழிபாடு நடத்துவது வழக்கமாகும்.
இந்தாண்டுக்கான தோடர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகையான ‘மொற்பர்த்’ நேற்று தோடர் இன மக்களின் தலைமை மந்து என அழைக்ககூடிய ஊட்டி அருகேயுள்ள தலைக்குந்தா முத்தநாடுமந்து பகுதியில் கொண்டாப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் (மந்து) உள்ள தோடர் பழங்குடியின மக்கள் ஒன்று கூடி மொற்பாத் பண்டிகையை கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியின் போது தோடர் இன மக்களின் பாரம்பரிய கோவிலில் வழிபாடு நடத்தினர். தோடர் இன இளைஞர்கள் தங்களின் உடல் வலிமையை காட்டும் வகையில் இளவட்ட கல்லை தூக்கி தங்களது பலத்தை காட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தோடர் இன ஆண்கள், பெண்கள் தங்களின் பாரம்பரிய உடையணிந்து ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

Tags : festival ,Moorbert ,Todar ,Talakunda ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...