×

காரைக்காலில் இருந்து கும்பகோணத்திற்கு 2,700 மது பாட்டில்கள் மினி வேனில் கடத்தல் 2 பேர் கைது

திருவாரூர், பிப்.18: புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து கும்பகோணத்திற்கு 2,700 மது பாட்டில்களை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று மாலை பேரளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து வந்த மினி வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சாக்கு மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கேட்டபோது தேங்காய் மூட்டைகள் எடுத்து செல்வதாக வேனில் வந்த இருவரும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார் அந்த சணல் சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் 18 சாக்கு மூட்டைகளில் 2,700 எண்ணிக்கையில் குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரிந்தது. மேலும் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள இந்த மது பாட்டில்களை கும்பகோணத்திற்கு கடத்திச் சென்றதும் தெரியவந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்ட நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த ஜெயகாந்தன்(40) மற்றும் மகேந்திரன்(37) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Karaikal ,Kumbakonam ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...