×

திருவாரூர் அருகே கூடூரில் ரயில்வே சுரங்கப்பாதையை சூழ்ந்த ஆற்றுநீர் கிராம மக்கள் கடும் அவதி

திருவாரூர், பிப்.18: திருவாரூர்அருகே கூடூரில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மீண்டும் ஆற்றுநீர் சூழ்ந்துள்ளதால் அந்தப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்து செல்ல முடியாமல் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை வழியாக காரைக்குடிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தற்போது ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ரயில் பாதையில் ஏற்கனவே இருந்து வந்த ரயில்வே கேட்டுகள் பலவற்றிலும் ஆட்களை குறைப்பதற்காக அந்த ரயில்வே கேட் இருந்த இடத்தில் ரயில்வே லைன் அடிப்பகுதியில் பொதுமக்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் அருகே கூடூர் என்ற இடத்தில் இதே போன்று ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சுரங்கப்பாதையானது அங்கு உள்ள காட்டாற்றின் கரையை ஒட்டியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்தக் காட்டாற்றில் தண்ணீர் செல்லும் காலங்களில் சுரங்கப் பாதையின் வடிகாலுக்காக அமைக்கப்பட்டுள்ள குழாயில் ஆற்றின் நீரானது மழை காலங்களில் உட்புகுந்து இந்த சுரங்க பாதையை அடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த சுரங்கப்பாதை ஒட்டிய கூத்தங்குடி, அன்னுக்குடி, அன்னவாசல், கல்யாணமகாதேவி, கட்டளை தெரு உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சுரங்கப்பாதையை கடந்து திருவாரூர் நகரத்திற்குள் வரமுடியாமல் பாதிக்கப்படுவர். தற்போது மழை காலம் ஓய்ந்த பின்னரும் இந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் வடியாமல் இருந்து வருகிறது. இதே போன்று தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் இதற்கு நிரந்தர தீர்வினை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டபோதே மழை காலத்தில் பெரும் பாதிப்பாக இருக்கும் என்பதால் இந்த பகுதியில் முன்பு இருந்தவாறு ரயில்வே கேட் ஒன்று அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், ரயில்வே துறைக்கும் நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதனை சற்றும் பரிசீலனை செய்யாமல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதன் விளைவாக தற்போது அப்பகுதி மக்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை எற்ப்பட்டுள்ளது. மழை காலம் ஓய்ந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை. மேலும் இந்த ஊர்களில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் செல்ல வழியில்லாமல் இருந்து வருவதுடன் அவசர சிகிச்சைக்கு கூட பொதுமக்கள் நகரத்திற்குள் உடனடியாக வர முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக தற்போது ரயில்வே லைனை கடந்தவாறும், சுரங்க பாதையின் இடுப்பளவு நீரில் பொதுமக்கள் சென்று வரும் நிலை இருந்து வருகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வினை மாவட்ட நிர்வாகமும் ரயில்வே துறையும் உடனடியாக எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : river ,railway tunnel ,Koodur ,Thiruvarur ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...