சேதுபாவாசத்திரம், பிப்.18: சேதுபாவாசத்திரம் அருகே வரும் 22ம் தேதி நாட்டு படகு மீனவர்கள் கஞ்சிதொட்டி திறந்து காத்திருப்பு போராட்டம் நடத்துகிறார்கள். கடந்த 6ம் தேதி நடைபெற்ற தஞ்சை, நாகை, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட நாட்டு படகு மீனவர்களின் ஆலோசனை கூட்ட தீர்மானத்தின்படி பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் வளத்தையும் கடல் வளத்தையும் முற்றாக அழித்து வரும் நாகை, காரைக்கால் மாவட்ட விசை படகுகள் ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை வரை 5 மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விசை படகுகள் மீன்பிடிக்க செல்ல வேண்டும். இந்த தொழில் ஒழுங்கு முறையை சீர்குலைக்கும் வகையில் 7 நாட்களும் கடலிலேயே தங்கி தொழில் செய்யும் வகையில் தங்கு கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதை தமிழக, புதுச்சேரி மாநில மீன்வளத்துறை நிர்வாகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடி தொழில் செய்வதையும் 5 நாட்டிகல் மைல் (9 கிலோ மீட்டர்) தூரத்திற்கு உள்ளே மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதிக்க கூடாது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ம் தேதி மல்லிபட்டினம் மீன்துறை அலுவலகம் முன் கஞ்சி தொட்டி திறந்து மாவட்டம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.