குளித்தலை, பிப்.18: குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், கிளை சிறைச்சாலை, கருவூலம், இசேவை மையம், பொதுப்பணித்துறை அலுவலகம், சப்கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதனால் தினந்தோறும் அலுவலகத்திற்கு உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் வாகனத்திலும், டூவீலர்களிலும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அனுமதியின்றி மணல் அள்ளிய தாக வருவாய்த்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட வாகனங்கள் பல மாதங்களாக தாலுகா அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அவசர நிமித்தமாக வாகனத்தில் வருபவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் இம்மாதம் இறுதிக்குள் சட்டசபை தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்போகும் நிலையில் தேர்தல் பணி தொடங்கிவிட்டால் குளித்தலை தொகுதிக்குட்பட்ட அனைத்து தேர்தல் அலுவலர்களும் இந்த அலுவலகத்திற்கு தான் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.
சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த தாலுகா அலுவலகத்தில் இருந்துதான் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அப்போது இங்கு நிறுத்தப்படும் வாகனங்களால் வாக்குப் பெட்டி இயந்திரங்கள் எடுத்து பணிகளுக்கு இடையூறாக இருக்கும். இந்த வாகனங்கள் பல மாதங்களாக நிற்பதால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் வைத்திருக்கும் கடை தெரியாமல் வெளியே சென்று அதிக தொகை கொடுத்து மனுக்களை எழுத வேண்டியுள்ளது. அதனால் பொதுத்தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்துவரும் மாற்றுத்திறனாளிகள் கடைகள் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் தாலுகாக அலுவலகம் முன் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.