திருச்சி, பிப். 18: மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பழைய கட்டிடத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் உங்களை தேடி தமிழ் மருத்துவம் விழிப்புணர்வு முகாம் இன்று (18ம் தேதி) நடக்கிறது. மருத்துவ முகாமை கலெக்டர் மலர்விழி, அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் அசோகன் துவக்கி வைக்கின்றனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் முகாமில் பெண்களுக்கான கருப்பை கட்டி, சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு நோய், அதிக உதிரப்போக்கு, மாதாந்திர தீட்டு பிரச்னை, மூட்டு வலிகள், தோல்நோய்கள், சளி, இருமல், மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவு, ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய், ரத்த கொதிப்பு நோய்க்கு இலவச பரிசோதனை மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்படும். ஆங்கில மருந்துகளை பல ஆண்டுகள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் நிலையில் கட்டுப்படாதவர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.