×

கிணற்றில் கழிவுநீரை சுத்தம்செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பலி: மதுரவாயலில் பரிதாபம்

பூந்தமல்லி: மதுரவாயலில் கிணற்றில் கலந்து கழிவுநீரை சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தார். சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், பாக்கியலட்சுமி நகர் மெயின் ரோடை சேர்ந்தவர் நித்யா. இவரது வீட்டின் தரைத்தளத்தில் உள்ள உறை கிணற்றில் சென்னை மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கிணற்றில் கலந்துள்ளது. இதனை சுத்தம் செய்வதற்காக மதுரவாயலை சேர்ந்த ரவி (52), காசி (50) என்ற இரண்டு தொழிலாளர்களை வரவழைத்துள்ளனர்.

நேற்று ரவி, காசி இருவரும் முப்பது அடி ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியது. இதில் இருவரும் மூச்சுத்திணறி மயங்கினர். தகவலறிந்த தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் மயங்கி கிடந்த ரவியை மீட்டனர். ஆனால் அதற்குள் ரவி பரிதாபமாக இறந்துவிட்டார். காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மதுரவாயல் போலீசார் விரைந்து வந்து ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...