×

கஞ்சா கடத்தில் தொடர்புடையை 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது: டிஎஸ்பி அதிரடி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆந்திரா, ஒடிசா, டெல்லி, ஜார்கண்ட் உள்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னை வந்து செல்கின்றன. இந்த வாகனங்களில் கஞ்சா, செம்மரக்கட்டை, அபின், குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை மர்ம நபர்கள் தொடர்ச்சியாக கடத்திச் செல்கின்றனர்.

இவற்றை தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்த் உத்தரவின்பேரில், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான போலீசார் நாள்தோறும் எளாவூர் சோதனை சாவடி, சத்தியவேடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சோதனையில் இதுவரை 156 கிலோ கஞ்சா கடத்திய 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 73 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி பரிந்துரை பேரில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில், மேற்கண்ட சோதனைச் சாவடிகளில் வழியாக தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ், ஒச்சப்பதேவர், தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், கேரளாவை சேர்ந்த ஆருமோன், திருச்சியை சேர்ந்த முகமது அசாருதீன், ரவி, மணிகண்டன், கரிமூதின் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் கும்மிடிப்பூண்டி, பஜார் பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருபவர்களிடம் 45 சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து, வேறொரு நபர் மூலம் அந்தக் கார்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு திருட்டுத்தனமாக கடத்தலில் ஈடுபட்ட பொன்னேரி தாலுகாவை சேர்ந்த காண்டீபன், மணலி புதுநகரை சேர்ந்த கிருபாகரன் ஆகியோரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்