×

காவல்நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி பவித்ரா (23). நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு, பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (22) என்பவருடன் ரேஷன் கடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டுக்கு சென்ற பவித்ரா, நடந்த சம்பவம் பற்றி, தனது குடும்பத்தினரிடம் கூறினார். குடும்பத்தினர், பாலாஜி வீட்டுக்கு சென்று, அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைகண்ட அக்கம்பக்கத்தினர், இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் பவித்ரா, இதுகுறித்து சோமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில், இரவு வீடு திரும்பிய பவித்ராவின் அண்ணன் வினோத்திடம், இதுபற்றி குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், கத்தியுடன் பாலாஜி வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாலாஜியின் தந்தை தாமோதரன், தனது மகனை கொலை செய்ய வந்ததாக, போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார், நேற்று வினோத்தை தேடி வீட்டுக்கு சென்றனர். அப்போது வினோத் வீட்டில் இல்லை. இதையடுத்து, அவரது சகோதரரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதையறிந்த வினோத், நேற்று மாலை மண்ணெண்ணெய் கேனுடன் சோமங்கலம் காவல் நிலையம் சென்றார். அங்கு, எனது தங்கை கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், எனக்கு பதில் என் சகோதரரை காவல் நிலையம் கொண்டு வந்தீர்கள் என கூறி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த போலீசார், அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். தொடர்ந்து, பாலாஜியை அழைத்து, இருதரப்பினரிடமும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : teenager ,police station ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...