ஓமலூர், பிப்.18: ஓமலூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில், காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி, நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குமாவட்ட தலைவர் நல்லதம்பி, செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தனர். இதில் காவிரி உபரிநீர் இணைப்பு திட்டத்தை ஓமலூர் சரபங்கா நதி, சேலம் திருமணிமுத்தாறு, ஆத்தூர் வசிஷ்டநதி ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை முழக்கமிட்டனர். கடந்த திமுக ஆட்சியில் காவிரி உபரிநீர் திட்டம் வகுக்கப்பட்டது. உபரிநீரை சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்டநதி ஆகிவற்றில் இணைத்து, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டது. முதல்வர் பழனிசாமி இந்த திட்டத்தை மாற்றி, சேலம் மாவட்ட மக்களை முற்றிலுமாக புறக்கணித்து செயல்படுத்தியுள்ளார். காவிரி உபரிநீர், நூறு ஏரிகள் இணைப்பு திட்டத்தை புதிதாக கொண்டு வந்து, தாரமங்கலம் ஒன்றியத்தில் ஒருசில ஏரிகள் வழியாக இடைப்பாடிக்கும், நாமக்கல் பகுதிக்கும் கொண்டு செல்கிறார். அதை வரவேற்கிறோம். அதேசமயம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், நதிகள் அதை சார்ந்த மக்கள் பயனடையும் வகையில், காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.