சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் எதிர்வரும் 23.04.2026 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் 06.04.2026 (திங்கட்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்.
1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்.
மேலும், வேட்புமனுக்களானது மேற்கண்ட நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே பெறப்படும். வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வேட்பாளர்கள் வேட்பு மனுவினை இணையவழியில் (Suvidha Portal) பூர்த்தி செய்திடலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத்தாக்கலின் போது நேரில் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து வேட்பு மனுக்களும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேற்குறிப்பிட்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நாட்களில் நேரில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும்.
