×

தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு

விருதுநகர், பிப்.18: இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் முதல் 40 நாட்கள் நோன்பிருந்து தவ வாழ்வு, அறவாழ்வு, ஜெபவாழ்வு மேற்கொண்டு 7 வெள்ளிக் கிழமைகளில் இயேசு கிறிஸ்துவின் 14 திருப்பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடுகளை நடத்துவார்கள். சாம்பல் புதன் முதல் புனித வாரம் முடிய உள்ள 40 நாட்களிலும் திருச்சடங்குகளை நடத்தும் குருக்கள் சிவப்பு அல்லது ஊதா நிற திரு உடைகளை அணிந்து திருப்பலியை நடத்துவார்கள். சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் விருதுநகர் மறைமாவட்ட அதிபரும், பங்குத்தந்தையுமான பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ், துணை பங்குத்தந்தை சந்தியாகப்பன் ஆகியோர் தவக்காலத்தை தொடங்கி வைத்தனர் பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர், விருதுநகர் எஸ்எப்எஸ் மேல்நிலைப்பள்ளி முதல்வர் இன்னாசிமுத்து ஆகியோர் தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.

நிறைவாழ்வு நகர் துய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை தாமஸ்வெனிஸ் தலைமையிலும், ஆர்ஆர் நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அலெக்ஸ்ஞானதுரை, துணைப்பங்குத்தந்தை மரியபென்சிகர் தலைமையிலும், சாத்தூர் ஒத்தையால் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ் தவக்காலத்தை தொடங்கி வைத்தார். சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுகளில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பிப்.19ம் தேதி முதல் ஏப்.2ம் தேதி புனித வெள்ளி வரை 7 வாரம் வெள்ளிக்கிழமைகளிலும் சிலுவைப்பாதை வழிபாடுகளும், தவக்கால வழிபாடுகளும் நடைபெறுகிறது.

Tags : churches ,
× RELATED தேவாலய பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்த் நியமனம்