பாப்பாரப்பட்டி, மார்ச் 27: பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில், நேற்று நாம் தமிழர் கட்சியின் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பழனியம்மாள், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் சேகரிக்க வைத்தார். இது குறித்து வாட்ஸ்அப், சமூக ஊடகங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில், பென்னாகரம் வட்ட தேர்தல் பறக்கும் படை அலுவலர் அய்யாவு, பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பழனியம்மாள் மீது, உரிய அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்தது, குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியது தொடர்பாக குழந்தை தொழிலாளர் சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
