×

தி.பூண்டி அருகே மயானம் செல்ல சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல்


திருத்துறைப்பூண்டி, பிப்.17: திருத்துறைப்பூண்டி அருகே மயானத்திற்கு சாலை வசதி கோரி பாடையுடன் சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரகுடி கிராமத்தில் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்வதற்கான சாலை வசதி இல்லை. இதனால் குறிப்பிட்ட தூரம் வரை வயலில் இறங்கி சவ ஊர்வலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று ஆப்பரகுடி சிவன்கோயில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி முனியம்மாள்(75) வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். இறுதிச்சடங்குகள் முடிந்து மயானத்திற்கு மூதாட்டி உடலை எடுத்து சென்றனர். அப்போது மயானத்திற்கு செல்ல சாலை வசதி உடனடியாக செய்து தரவேண்டும் என வலியுறுத்தி திடீரென திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் மூதாட்டியின் சடலத்தை சாலையின் நடுவே வைத்து நலசங்க மாவட்ட தலைவர் ராஜூ, செயலாளர் சீனிவாசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல்அறிந்து வந்த தாசில்தார் ஜெகதீசன், டிஎஸ்பி பழனிச்சாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தையடுத்து மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த மறியலினால் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,road facility ,cemetery ,T.Poondi ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...