காரைக்குடி, பிப்.17: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வருகை பேராசிரியர் ராஜவேலு, துறைத்தலைவர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் காளையார்கோவில் அருகே இலந்தகரையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியத் தொல்லியல் துறை 2020-2021 கல்வியாண்டில் இப்பகுதியில் அகழாய்வு செய்ய பல்கலைக்கழகத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழகத்தொல்லியல்துறையும், அழகப்பா பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன. இதுகுறித்து துணைவேந்தர் என்.ராஜேந்திரன் கூறுகையில், ‘‘தொல்லியல் ஆர்வலர் ரமேஷ் மூலம் பெறப்பட்ட இலந்தகரை பொருட்களின் மூலம் இப்பகுதி சிறந்த கலாச்சாரம், பண்பாட்டை கொண்டு விளங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் அகழாய்வுகளில் இந்திய தொல்லியல் துறை இணைந்து செய்வது இதுவே முதல் முறையாகும். இந்த அகழாய்வில் இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றும் தொல்லியலாளர் இணை இயக்குநராக செயல்படுவார். இப்பகுதியில் அரிய அரும்பொருட்களும், பண்பாட்டு எச்சங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழக வரலாற்றில் கீழடிக்கு இணையாக இலந்தகரை இருக்க கூடும் என இங்கு கிடைத்த பொருட்களின் மூலம் அறிய முடிகிறது. இந்த அகழாய்வு மார்ச் இரண்டாவது வாரத்திலிருந்து தொடங்கப்பட உள்ளது. இந்தியத் தொல்லியத்துறை அகழாய்வில் பங்கு பெறும் தொல்லியலாளர் பெயரை அறிவித்தவுடன் அகழாய்வு முறையாக குறிப்பிட்ட காலத்தில் தொடங்கப்படும்’’ என்றார். நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் கல்வெட்டு படிகள் எடுத்து தனது பாதுகாப்பில் வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட மைப்படிகளை துணைவேந்தரிடம் ஒப்படைத்தார். அது வரலாற்றுத்துறை அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. கலைப்புல முதன்மையர் பேராசிரியர் முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.