ஏற்காடு, பிப். 17: ஏற்காடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரிய திமுகவினருடன், அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று, ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும், ஏற்காடு டவுன் கவுன்சிலர் கலைவாணி, கடந்த 3 கூட்டங்களில் கலந்துக்கொள்ளவில்லை என்பதை தீர்மாணமாக நிறைவேற்றக்கோரி, திமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு துணைத்தலைவர் சேகர், கவுன்சிலர்கள் கோகிலா, சின்ன வெள்ளை ஆகியோர் கோரினர். ஆனால் தலைவர் சாந்தவள்ளி, அவ்வாறு தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்றார். இதையடுத்து திமுக கேள்வி கேட்க, அங்கிருந்த அதிமுகவினர் எழுந்து, திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அலுவலக பணியாளர்கள், வாக்குவாத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் அதிமுகவினரை அரங்கை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வெளியே சென்ற பின்னரும் இரு கட்சியை சேர்ந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்லையில் மாலை 3.45 மணியளவில் தீர்மானங்களில் ஒன்றியக்குழு தலைவர் சாந்தவள்ளி, கவுன்சிலர்கள் வருதாயி, கலைவாணி ஆகியோர் மட்டும் கையொப்பமிட்டனர். இதையடுத்து தலைவர் சாந்தவள்ளி, கூட்டம் முடிந்து விட்டதாக கூறி, அரங்கத்தை விட்டு வெளியேறினார். ஆனால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக எழுதி கையொப்பமிட்டனர். மேலும் தொடர்ந்து 3 கூட்டங்களில் கவுன்சிலர் கலைவாணி பங்கேற்கவில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றுமாறு ஒன்றிய ஆணையாளரிடம் மனு வழங்கினர்.