திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே இரவோடு இரவாக பாத்திரம் வினியோகம் செய்த தவெகவினர் தேர்தல் பறக்கும் படையினரை பார்த்து ஓட்டம் பிடித்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள முரசுக்குட்டை என்ற பகுதியில், தவெகவை சேர்ந்தவர்கள் வீடு, வீடாக விஜய் மற்றும் தவெக நிர்வாகி அருண்ராஜின் ஸ்டிக்கர் ஒட்டிய ‘எவர்சில்வர்’ பாத்திரங்களை நேற்றிரவு வினியோகம் செய்து வந்தனர். இதுகுறித்து வேளாண் உதவி அதிகாரி வெற்றி வேலுக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையிலான பறக்கும் படையினர் ஜீப்பில் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர்.
ஜீப்பை பார்த்ததும் அங்கிருந்த தவெகவினர் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்த பாத்திரங்கள் அடங்கிய மூட்டைகளை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். பறக்கும் படையினர் அங்கு சென்று பார்த்த போது, விஜய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த 14 எவர் சில்வர் பாத்திரங்கள் இருந்தது தெரியவந்தது. அதை கைப்பற்றி, வருவாய் கோட்டாட்சியர் லெனின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாத்திரங்கைள போட்டு விட்டு நள்ளிரவில் ஓட்டம் பிடித்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
