×

மின்மாற்றியில் காப்பர் வயர் திருட்டு

போச்சம்பள்ளி, பிப்.17: போச்சம்பள்ளி அருகே வாடமங்கலம் நாகக்குட்டை ஏரியில் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மின் மோட்டாரை இயக்க போதிய மின் பளு இல்லாததால் கடந்த ஓராண்டுக்கு மேலாக மின் மோட்டார் செயல்படாமல் இருந்தது. இதையடுத்து, வாடமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் லட்சுமி வெங்கடேசன் கூடுதல் மின் பளுவிற்காக புதிய மின்மாற்றியை அமைக்க மின்வாரியத்தை அணுகி கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து,  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் மின்சாரத்தை துண்டித்து vவிட்டு டிரான்பார்மரில் இருந்த மின் மாற்றியை கீழே இறக்கி அதிலிருந்த காப்பர் வயர்கள் மற்றும் ஆயில் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து பண்ணந்தூர் உதவி மின் பொறியாளர் அருள், பாரூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதில், ₹1.50 லட்சம் மதிப்பிலான மின் மாற்றியை உடைத்து அதிலுள்ள காப்பர் வயர்கள் மற்றும் ஆயிலை திருடிச் சென்று விட்டதாக கூறியுள்ளார். இதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு