×

சூளகிரியில் பரபரப்பு பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு சந்தை வியாபாரிகள் போராட்டம்

சூளகிரி, பிப்.17: சூளகிரியில்  தினசரி சந்தையை ஏலம் எடுத்தவர் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதால்,  சந்தைக்கான குத்தகை ஏலத்தை ரத்து செய்யக்கோரி நடைபாதை வியாபாரிகள் பிடிஓ  அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி  சந்தையில் புதிதாக 42 கடைகள் கட்டி தினசரி சந்தையாக மாற்றி கடந்த ஜனவரி 6ம்  தேதி பிடிஓ அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட்டது. அதில், சூளகிரியை சேர்ந்த  அதிமுக பிரமுகர் ₹43 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.  இதையடுத்து, சந்தை வீதியில் உள்ள கடைகளுக்கு அதிக அட்வான்ஸ் மற்றும்  தினசரி வாடகையாக கடைக்கு ₹200 வரை வசூல் செய்யப்டடு வருகிறது.

மேலும்,  சந்தைக்கு வெளியே ஓசூர்-பேரிகை சாலை, ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் கடை  வைத்துள்ள நடைபாதை வியாபாரிகளிடம் ₹200 வரை கட்டாய  வசூல் செய்யப்படவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபாதை வியாபாரி  ஒருவரை வாடகை கேட்டு தாக்கியதில் அவரது காது கிழிந்தது.

இதனால்,  ஆத்திரமடைந்த சந்தை மற்றும் நடைபாதை வியாபாரிகள் குத்தகைதாரரான அதிமுக  பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்து, சந்தை ஏலத்தை ரத்து செய்யக்கோரி நேற்று  காலை சூளகிரி பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த  வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ முருகன், திமுக மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர்  ஷேக்ரஷீத் ஆகியோர் பிடிஓ சிவக்குமாரிடம் குத்தகைதாரர் மீது நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தினர். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில்  வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், சூளகிரி பிடிஓ  அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Market traders ,BDO ,
× RELATED தென்காசி யூனியன் கூட்டம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்