உடுமலை, பிப். 17: திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக நேற்று 28 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டன. தமிழக அரசானது கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஏழை எளிய மக்கள் மற்றும் கிராமப்புற கூலி தொழிலாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் எனும் மருத்துவமனைகளை திறந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகரம், காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், உடுமலை ,குடிமங்கலம், ஊத்துக்குளி, பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட 21 இடங்களில் மினி கிளினிக்குககள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் தொடர்ந்து நேற்று இரண்டாவது கட்டமாக மாவட்ட முழுவதும் 28 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் ஊரகப் பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படும். நகர்ப்புறப் பகுதிகளில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவ உதவியாளர் ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
நேற்று உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி. வேலூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டது. கால்நடை மற்றும் பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள் என அனைவருக்கும் சளி பரிசோதனை சர்க்கரை அளவு சிறுகாயங்கள் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.