×

சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம், பிப்.17:  சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது, வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், யானைகள் வனத்தை விட்டு வெளியேறி புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், நேற்று மதியம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை திம்பம் மலைப்பகுதியை அடுத்துள்ள ஆசனூர் அருகே சாலையில் அங்கும் இங்கும் நடமாடியது. யானை சாலையில் நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தினர்.

இதனால், நீண்டவரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் அரை மணி நேரம் சாலையில், நடமாடிய ஒற்றையானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றபின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. பகல் நேரங்களில் காட்டுயானைகள் சாலையில் நடமாடுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : Satyamangalam ,road ,Mysore ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே...