×

நடைபாதை வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் உள்ள இடங்களில் 250க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் சாலையோரங்களில் கடை வைத்து பல தலைமுறைகளாக வியாபாரம் செய்கின்றனர். இதில் தொல்லியல் துறை மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், இவர்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில், வியாபாரிகள் மீது பொய் வழக்கு போடுதல், வியாபாரம் செய்யக்கூடாது என மிரட்டுவது உள்பட பல்வேறு காரணங்களை கண்டித்து, மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தொழிற்சங்கம், நடைபாதை வியாபாரிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பகுஜன் சமாஜ் கட்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பெரியாரன்பன் முன்னிலை வகித்தார். பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் மல்லை ஆனந்த் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தொழிற்சங்க பொதுச்செயலாளர் பாரதிதாசன் கலந்து கொண்டு, நடைபாதை வியாபாரிகளின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்துக்காக மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை சட்டம் இயற்றியது. அதை அந்தந்த மாநில அரசுகளும் பின்பற்றும் வகையில் 2015ம் ஆண்டில் நடைபாதை வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றியது.

அதன்படி, நடைபாதை வியாபாரிகளுக்கு மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும், தொல்லியல் துறையும் நடைபாதை வியாபார ஒழுங்கு முறை சட்டத்தின்படி வியாபாரம் செய்ய ஒழுங்குபடுத்தி கொடுக்க வேண்டும். வியாபாரிகளை அப்புறப்படுத்தி, அவர்கள் மீது அடக்குமுறையை திணிக்க கூடாது என பேசினார்.

Tags : traders ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...