×

முதியவர்களிடம் நூதன வழிப்பறி: பைக் ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

ஆவடி: திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கோதை(65). நேற்று முன்தினம் கோதை அதே வீட்டு முன்பு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் கோதையிடம், தன்னை சுய உதவி குழுவிற்கு கடன் கொடுக்கும் வங்கி அதிகாரி என்றும், வங்கியில் கடன் தருவதாகவும் கூறினார். அப்போது திடீரென கோதை அணிந்திருந்த மோதிரத்தை வாங்கி அங்கிருந்து பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதுகுறித்து கோதை திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், திருநின்றவூர் கொசப்பாளையம் என்.எஸ்.கே நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(60). அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர். நேற்று முன்தினம் வங்கி கணக்கில் இருந்து ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக அம்பத்தூரில் உள்ள  வங்கியில் 12 ஆயிரத்தை எடுத்து அம்பத்தூர் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது, பழைய டவுன்ஷிப் சாலை பகுதியில் பைக்கில் வந்த நபர் லிப்ட் கொடுத்து வெங்கடேசனை ஏற்றிக்கொண்டார். வரும் வழியில் ஒரு டீக்கடை முன்பு பைக்கை நிறுத்தி டீ குடிக்க அழைத்து சென்று பணப்பையை ஏமாற்றி வாங்கி மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பிச்சென்றார். இதுகுறித்து வெங்கடேசன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பெரியத்துரை தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலம் வழிப்பறி ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags : Trail ,Elderly ,Police Web for Bike Assassins ,
× RELATED ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு