நாகை, பிப். 16: சாத்தூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு சிவசேனா கட்சி மாநில செயலாளர் சுந்தர வடிவேலன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் சாத்தூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி இறந்து விட்டார்கள் என்ற செய்தி நெஞ்சத்தை பதைபதைக்க வைக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு சிவசேனா கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. மருந்து தொழிற்சாலை இயங்குவதற்கான சரியான கட்டமைப்புகள் இல்லாமல் இயக்கியதும் தவறு. இயங்க அனுமதித்த அதிகாரிகள் மீதும் தவறு இருக்கிறது. இனி மேலாவது உயிருக்கு ஆபத்தான தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் உரிய கட்டமைப்புகள், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து இயங்க அனுமதிக்க வேண்டும். இந்த தொழிற்சாலை இயங்க அனுமதித்த அரசு அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். தொழிலாளிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.