×

எரிபொருள் விலை அதிகரிப்பால் விமான பயணிகள் கட்டணம் உயரும்: ஒன்றிய அமைச்சர் சூசகம்

விசாகப்பட்டினம்: விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக விமானக் கட்டணங்கள் உயரக்கூடும் என ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாக ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மக்களவையில் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ‘விமான எரிபொருளின் விலையானது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது நிலவி வரும் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் ஏப்ரல் 1ம் தேதி முதல் தெரியவரும். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலில், விமானங்களை பாதுகாப்பாக இயக்குவதற்கே முன்னுரிமை அளிக்கிறோம். விமானப் போக்குவரத்துத் துறை, வெளியுறவுத் துறை மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகங்கள் ஒன்றிணைந்து ஆலோசனைகளை மேற்கொண்டு சரியான முடிவை எடுக்கும். இந்த விலை உயர்வு பாதிப்பு விமான நிறுவனங்களின் செயல்பாடுகளையோ அல்லது பயணிகளையோ பாதிக்கக்கூடாது என்பதே அமைச்சகத்தின் நோக்கம்’ என்றார்.

இதற்கிடையே, வளைகுடா நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏடிஎப் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தி வருகிறது. அதேபோல், ஆகாசா ஏர் நிறுவனமும் 15ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான முன்பதிவுகளுக்கு புதிய எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Union Minister ,Susakam ,Visakhapatnam ,EU ,Aviation Minister ,Ram Mohan Naidu ,Porch ,West Asian ,
× RELATED வர்த்தக காஸ் தட்டுப்பாடு, விலைவாசி...