டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி; அடுத்த 4 நாட்களில் தொகுதி பங்கீடு குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவு பெறும். கூட்டணி கட்சிகளில் யார் யாருக்கு எந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதோ அங்கு வாய்ப்பு வழங்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.
இதையடுத்து அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைகளும் தீவிரபடுத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தொகுதிகளை முடிவு செய்வதற்காக அன்புமணி, டிடிவி தினகரன் இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள இல்லத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார். என்டிஏ கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன் தொகுதி பங்கீடு தொடர்பாக அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுக வலியுறுத்திய இரட்டை இலை சின்னத்துக்கு பதிலாக, குக்கர் சின்னத்திலேயே அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் – அமித் ஷா சந்திப்பில் தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயலும் பங்கேற்றுள்ளார்.
