×

பொன்னை அருகே சுடுகாடு சாலை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பொன்னை, பிப்.16: பொன்னை அருகே சுடுகாடு செல்லும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை காலனி பகுதியில் நேற்று இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். அப்போது சுடுகாடு சாலை ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் சடலத்தைக் கொண்டு சென்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சடலத்தை கொண்டு சென்றவர்கள் திடீரென பொன்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த பொன்னை இன்ஸ்பெக்டர் காண்டீபன், மேல்பாடி எஸ்ஐ கார்த்தி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்தனர். அப்போது, உடனடியாக சாலையை ஆக்கிரமித்து கட்டி உள்ள வீடுகளை அகற்ற கோரி வருவாய் ஆய்வாளரிடம் முறையிட்டனர். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் பொன்னை- வேலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : removal ,Ponnai ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...