×

108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான 12 மணி பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவு

 

சென்னை: ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான 12 மணி நேர பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2005ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த பணியில் 5000க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு நாளுக்கு 12 மணி நேரப் பணி என்ற அடிப்படையில் 2 ஷிப்ட்களில் பணியாற்றும் பணியாளர்கள், தங்களது வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், உடன்பாடு எட்டப்படாததால் அவர்களின் கோரிக்கை சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த வழக்கு தீர்ப்பாய தலைவரான டாக்டர் பி.முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 12 மணி நேரம் பணியாற்றுவதால் தூக்கமில்லாமல் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. 12 மணி நேர பணி நடைமுறை தொழிலாளர் சட்டத்துக்கு விரோதமானது என்று வாதிட்டனர்.

ஆம்புலன்ஸ் நிறுவனமான இ.எம்.ஆர்.ஐ-ஜி.ஹெச்.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எந்தவித லாப நோக்கமும் இல்லாமல், பொதுமக்களுக்கு இலவசமாக 24 மணி நேரமும் சேவை வழங்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 12 மணி நேர பணி என்ற நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது. பணியில் சேரும் ஊழியர்கள் அதை ஏற்றுக்கொண்டு உள்ளனர். 12 மணி நேரத்துக்கான ஊதியம்தான் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு விதிகளின்படி ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி நேரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களுக்கு விரோதமாக பின்பற்றப்படும் 12 மணி நேர பணி நேரத்தை 8 மணி நேரமாக ஆம்புலன்ஸ் நிறுவனம் குறைக்க வேண்டும். இந்த உத்தரவு குறித்து தொழில் தகராறு சட்டத்தின் கீழ் அரசிதழில் அறிவிக்கை வெளியிட வேண்டும். அதன்பிறகு 30 நாட்களில் 8 மணி நேர பணி நடைமுறை அமலுக்கு வரும். அதுவரை 12 மணி நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணி நேரத்துக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.

இதேபோல், 108 ஆம்புலன்சின் பெண் பணியாளர்களுக்கு ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் தனி ஓய்வறைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். அங்குள்ள கழிவறைகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Tags : Labour Tribunal ,Tamil Nadu government ,Chennai ,Chennai Labour Tribunal ,Tamil Nadu… ,
× RELATED ரம்ஜான் பண்டிகையையொட்டி...