×

அடுத்தடுத்த வீடுகளில் நகை கொள்ளை

போச்சம்பள்ளி, பிப்.16:  மத்தூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மாடரஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(45). இவரது உறவினர் சரவணன்(35).  ஜவுளி வியாபாரிகளான இவர்கள், அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம், பர்கூர் சந்தைக்கு  குடும்பத்தோடு ஜவுளி வியாபாரத்திற்கு சென்று விட்டனர். இரவு அங்கேயே தங்கி விட்டு, நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது இருவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்த போது, சுரேஷ் வீட்டில் இரண்டரை பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் ₹20 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.

இதேபோல், சரவணன் வீட்டில் இரண்டரை பவுன் நகை மற்றும் எல்இடி டிவி மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து மத்தூர் போலீசில் இருவரும் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில்  பூட்டை உடைத்து வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது  தெரியவந்தது. அவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களா அல்லது வெளியூரில் இருந்து கைவரிசை காட்டிச் சென்றனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Jewelry robbery ,houses ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...